பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டிய சந்தர்ப்பம் இது......
தற்போதைய அசாதாரண சூழலில் பொதுமக்களாகிய உங்களின் பெறுமதி மிக்க உடமைகள் மற்றும் பொருட்களை பல நூதனமான முறையில் திருடர்கள் அபகரித்து செல்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உடமைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பது தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருப்பது மிக அவசியமாகும்.
உத்தியோகத்தர்கள் மற்றும் தேவை கருதி வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டியவர்கள் வீடு, அலுவலகங்களை பூட்டிச்செல்லும்போது சாவியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கக்கூடாது. வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருட்கள் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இதை திருடர்கள் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தக்கூடும்.
வீட்டை பூட்டிச்செல்லும்போது நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும் வெளியூர் செல்லும் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
வீட்டிற்கு அறிமுகமில்லாத நபர்கள் வரும்போது தேவையான விபரங்களை கேட்டு திருப்தி அளித்தால் மட்டுமே வீட்டினுள் அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் தொலைபேசி எண்கள், குடும்ப விபரங்களை தெரிவிக்கக்கூடாது.
அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க வேண்டும். பெண்கள் தனியாக இருந்தோலோ, குழந்தைகளுடன் முதியவர்கள் இருந்தாலோ வீட்டில் இரண்டு, மூன்று பேரை அனுமதிக்கக்கூடாது.
வீட்டில் தனியாக இருக்கும் முதியோரை கண்காணிக்க உறவினர்கள் அடிக்கடி சென்று பார்க்க வேண்டும். சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நகைகள், முக்கிய ஆவணங்களை சிலர் தங்களுடனே பாதுகாப்பு கருதி எடுத்துச்செல்கின்றனர். இது தவறு. சிலர் கவனத்தை திசை திருப்பி அதை திருட வாய்ப்புண்டு. சுற்றுலா இடங்களில் யாரையும் நம்பாமல் நமது பொருட்களுக்கு நாமே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் புதிய நபர்கள் வந்தால், அவர்கள் சந்தேகத்திற்குரியவர் என்றால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இன்றைய வாழ்க்கை முறையில் நமது சின்ன கவனக்குறைவால் திருடனிடம் நமது பணத்தை இழக்கக்கூடாது. எனவே நம்முடைய சில உறுதியான தொடர்ச்சியான நடவடிக்கைகளால் பொருட்கள் இழப்பினை தவிர்த்து தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்ப்பது நமது கடமையாகும்.
எப்பொழுதம் உங்களினதும் உங்கள் உடமைகள் மற்றும் சொத்துக்கள் மீது அதிக கவனத்துடன் இருங்கள்.
ஏற்கனவே பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு போராடும் நீங்கள் உங்கள் உடைமைகளை இழந்தால் அதனை திருப்பி ஈடுசெய்வது என்பதும் நடப்பு நிலையில் சாத்தியமற்ற ஒன்றாகும்.






